திலீபன் நினைவேந்தல் நாளை ஆரம்பம்!

தியாக தீபம் திலீபனின் 32வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாவும் யாழ். மாநகர சபையின் ஏற்பாட்டிலேயே இடம்பெறும் என்று யாழ். மாநகர மேயர் இம்மானுவேல் ஆனோல்ட் தெரிவித்துள்ளார்.

“ஆரம்ப நாள் நிகழ்வு எதிர்வரும் 15.09.2019 அன்று ஞாயிற்றுக்கிழமை தியாகி திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரமான காலை 9.30 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி அமைந்துள்ள இடத்தில் நடைபெறும்.

எனவே, அஞ்சலி செலுத்தவரும் சகலரும் குறித்த நேரத்திற்கு அரை மணித்தியாலங்களுக்கு முன்பாகவே (9.00 மணியளவில்) நினைவுத்தூபி முன்றலில் ஒன்று கூடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நிகழ்வின் நினைவுச்சுடரினை எமது மக்களுக்காக உயிர்நீர்த்த மாவீரர்களின் பெற்றோர்களில் ஒருவர் ஏற்றிவைப்பார். அதனைத் தொடர்ந்து ஏனையோர் தமது அஞ்சலிகளை செலுத்துவர்.

மேற்படி உணர்வுபூர்வமான ஆரம்ப நினைவுநாள் நிகழ்வில் கட்சி பேதங்களுக்கு அப்பால் சகல அரசியல் கட்சித் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், மாவீரர்களின் குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தமிழ் பேசும் மக்களாக ஒன்றாக அணிதிரண்டு நம் ஒற்றுமையை வெளிப்படுத்தி நிற்போமாக எனப் பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!