10 நாட்களுக்குள் வெளியாகிறது அதிபர் தேர்தல் அறிவிப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நாள் மற்றும் வேட்புமனுத் தாக்கல் செய்யப்படும் காலஎல்லை அடங்கிய சிறப்பு அரசிதழ் அறிவிப்பு அடுத்த 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

“அதிபர் தேர்தல் நடத்தப்படவுள்ள நாள் மற்றும் வேட்புமனுக்கள் கோரப்படும் அறிவிப்பு என்பன ஒரு அரசிதழில் வெளியிடப்பட வேண்டும்.

இந்த அரசிதழ் அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டு, 16 தொடக்கம் 21 நாட்களுக்குள் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

ஒரு பௌர்ணமி விடுமுறை நாளிலோ அல்லது அரசாங்க விடுமுறை நாளிலோ வேட்புமனுவை ஏற்றுக் கொள்ளவோ, தேர்தலை நடத்த முடியாது என அதிபர் தேர்தல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட 4 தொடக்கம் 6 வாரங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதற்கமைய தேர்தல் நடத்துவதற்கு பொருத்தமான நாள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்படும்“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!