சு.கட்சி விரும்பினால் களமிறங்கத் தயாராகவுள்ளேன் – குமார வெல்கம

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்தால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக தான் களமிறங்குவதற்கு தயாராகவுள்ளதாக அக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாப்பதற்கும், இன்னமும் எமது கட்சிக்கு ஆதரவாளர்கள் இருப்பதை வெளிப்படுத்துவதற்கும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவர் களமிறங்குவது மிகவும் அவசியமாகும்.

எனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வரும் எந்தவொரு வேட்பாளருக்கும் நாம் ஆதரவு வழங்குவோம். கட்சி தீர்மானித்தால் நானே வேட்பாளராகக் களமிறங்கவும் தயாராக இருக்கின்றேன்.

நான் சிறந்ததொரு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர். மற்றவர்களைப் போன்று ஒவ்வொரு கட்சிகளுக்கும் தாவும் கொள்கை என்னிடமில்லை. நான் என்னுடைய கட்சியை நேசிக்கின்றேன். எனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்தையும் செய்வேன்.

எம்முடைய கட்சி உருவாக்கப்பட்ட போது தற்போதைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தந்தையாரும் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவராக இருந்தார். அப்போது நாட்டின் அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 3 பொதுச்செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவ்வாறு நல்லிணக்கத்தை முதன்மைப்படுத்தியே அது செயற்பட்டு வந்தது.

தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழித்துவிடலாம் என்று சிலர் நினைக்கின்றார்கள். ஆனால் இந்த நாடு இருக்கின்றவரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இருப்பையும் எதுவும் செய்யமுடியாது. கட்சி தொடர்பில் மக்கள் மத்தியில் இன்னமும் ஆதரவும், எதிர்பார்ப்பும் காணப்படுகின்றது. எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு அதிக வாக்குகளையும் பெறமுடியும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என்றும் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!