லிபியாவில் 17 ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு- அமெரிக்க ராணுவம் அதிரடி

லிபியா நாட்டில் அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 17 ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

லிபியாவில் 2011-ம் ஆண்டு கிளர்ச்சியின்போது, முக்கிய அரசியல் தலைவரும், முன்னாள் லிபிய அதிபருமான முவம்மர் கடாபி கொல்லப்பட்டார். கடாபியின் மறைவுக்குப் பிறகு லிபியாவில் ஐஎஸ் அமைப்பு அங்கு வலுவாக காலூன்றியது. அதன் பின்பு பல ஆண்டுகளாக பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்நிலையில் லிபியா அரசுப் படைகளுடன் இணைந்து அமெரிக்க ராணுவத்தின் ஆப்பிரிக்க கமாண்டிங் குழு நடத்திய வான்வழி தாக்குதலில் 17 ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுமக்களை அச்சுறுத்தி வரும் பயங்கரவாத அமைப்புகள் லிபியாவில் காலூன்ற இனி ராணுவம் அனுமதிக்காது. அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு (செப். 26) நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த 17 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். லிபியாவில் அரசியல் ஸ்திரத்தன்மையை கொண்டுவரவும், பயங்கரவாத அமைப்புகளை தடுக்க மேற்கொள்ளப்படும் தூதரக முயற்சிகளுக்கும் அமெரிக்க ராணுவம் ஆதரவு அளித்து வருகிறது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!