தூய்மையற்ற ரயில் நிலையங்களின் பட்டியலில் முதலிடத்தில் சென்னை..!

இந்தியாவிலேயே மிகவும் அசுத்தமாக உள்ள ரயில் நிலையங்களின் பட்டியலில் சென்னை பெருங்களத்தூர் ரயில் நிலையம் முதலிடத்தையும், கிண்டி ரயில் நிலையம் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளன. இந்திய ரயில்வேத்துறை நாட்டிலேயே மிகவும் தூய்மையாக உள்ள பத்து ரயில் நிலையங்களின் பட்டியலையும், மிகவும் அசுத்தமாக உள்ள 10 ரயில் நிலையங்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளது. ரயில்வேதுறை அமைச்சகம் தூய்மை இந்தியா திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தி வருகிறது. எனினும் தூய்மை என்பது சீராக இல்லை. இந்த நிலையில் இந்தியா முழுவதும் உள்ள 720 ரயில் நிலையங்களில் மேற்கொண்ட ஆய்வின்படி, தூய்மையான ரயில் நிலையங்களில் முதல் பத்து இடங்களை பிடித்த ரயில் நிலையங்களையும் மிகவும் அசுத்தமான பட்டியலில் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ள ரயில்நிலையங்களையும் ரயில்வே அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது.

இதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் முதலிடத்தையும் ஜோத்பூர் இரண்டாவது இடத்தையும் துர்காபுரா மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்துமுறையே, அடுத்தடுத்த இடங்களை ஜம்முதாவி, காந்தி நகர், சூரத்கர், விஜயவாடா,உதய்பூர் நகரம், அஜ்மீர், ஹரித்வார் ஆகிய ரயில் நிலையங்கள் பிடித்துள்ளன. முதல்பத்து இடங்களில் ராஜஸ்தானில்மட்டும் 7 ரயில் நிலையங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டிலேயே மிகவும் மோசமான நிலையில் அசுத்தமாகக் காணப்படும் பட்டியலில் முதல் பத்து இடங்களில் தமிழக ரயில் நிலையங்களே 6 இடங்களைப் பெற்றுள்ளன.சென்னை பெருங்களத்தூர் முதலிடத்தையும், கிண்டி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து முறையே, டெல்லி சடார் பஜார், மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.

இதையடுத்து தமிழ்நாட்டைச்சேர்ந்த வேளச்சேரி, கூடுவாஞ்சேரி, சிங்கப்பெருமாள் கோவில் ஆகியவையும் கேரள மாமிலம் ஒட்டப்பாலம், தமிழகத்தின் பழவந்தாங்கல், பீகாரைச் சேர்ந்த அராரியாகோர்ட், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த குர்ஜா ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!