விரைவில் கோத்தாவைச் சந்திக்கிறது கூட்டமைப்பு

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுடன் விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தவுள்ளது என, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“எம்மை சந்திக்க கோத்தாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். அவருடன், மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச ஆகியோரும், இணைந்தே எம்மை சந்திக்கவுள்ளனர்.

நாங்கள் எமது நிலைப்பாட்டை அவர்களுக்கு எடுத்துக் கூறுவோம். அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் தொடர வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை, காணிகள் விடுதலை உள்ளிட்ட வேறுபல பிரச்சினைகளும் இருக்கின்றன.

ஐதேகவின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடனும் நாங்கள் பேச்சு நடத்தினோம். எமது கட்சியின் நிலைப்பாட்டை அவருக்கு விளக்கினோம்.

சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கையை எதிர்பார்க்கிறோம். அதனைப் பொறுத்து முடிவு செய்வோம்.” என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!