எமது அரசில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் : கோத்தாபய

பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவினை எதிர்க் கொண்டுள்ள மலையக மக்களுக்கு எமது அரசாங்கத்தில் ஆயிரம் ரூபா நாள் சம்பளம் பெற்றுக் கொடுக்கப்படும்.

தேசிய வருமானத்தை எவ்வாறு ஈட்டிக் கொள்ள முடியும் என்ற மார்க்கத்தை நன்கு அறிவோம். ஆளும் தரப்பினர் முன்வைக்கும் கேள்விகளுக்கு செயற்பாட்டின் ஊடாக பதில் வழங்குவேன். என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கை மன்ற கல்லூரியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பினை வழங்கும் தேயிலை உற்பத்தியாளர்களின் பொருளாதார நிலைமை பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.

ஒரு நாள் சம்பளம் 1000ம் ரூபாவாக வேண்டும் என்பது மலையக மக்களின் நியாயமான கோரிக்கையாகும். சம்பள விவகாரத்தில் அரசாங்கம் முழுமையாக தோட்ட கம்பனிகளையே நம்பியிருந்தது. தோட்ட கம்பனிகள் எப்படியும் மலையக மக்கள் கோரும் சம்பளத்தை வழங்க இணக்கம் தெரிவிக்கமாட்டார்கள்.

மலையக மக்களின் சம்பள விவகாரத்தில் கம்பனிகளை மாத்திரம் நம்பியிருந்தால் எவ்வித பயனும் ஏற்படாது. நிச்சயம் நாங்கள் 1000 நாள் கொடுப்பனவும் வழங்கி மலையகத்தினை நகரத்திற்கு இணையான வசதிகளுடன் அபிவிருத்தி செய்வோம். கல்வி , மற்றும்தொழிற் துறையினை விருத்தி செய்ய வேண்டிய தேவை காணப்படுகின்றது.

பொருளாதார ரீதியில் நாங்கள் முன்வைக்கும் திட்டங்கள் , மற்றும் வரி நீக்கம் தொடர்பில் ஆளும் தரப்பு தற்போது பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது.வாதப்பிரதி வாதங்களில் ஈடுப்பட வேண்டிய தேவை ஏதும் கிடையாது. ஆட்சிக்கு வந்து வழங்கியுள்ள வாக்குறுதிகளை செயற்படுத்தி பதில் வழங்குவேன் என அவர் இதன்போது தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!