மௌனம் கலைக்க தயாராகும் மைத்திரி…?

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் ஒருவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவு வழங்கவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.தேர்தல் நிறைவடையும் வரை சுயாதீனமாக செயற்படப் போவதாக அறிவித்திருந்த ஜனாதிபதி, எதிர்வரும் நாட்களில் அதிரடியான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளார்.

அதற்கமைய உறுதியான முறையில் பிரதான வேட்பாளர்கள் இருவரில் ஒருவருக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளார் என ஜனாதிபதிக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.சமகாலத்தில் ஜப்பானுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி எதிர்வரும் 28ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார். அதன் பின்னர் தனது உறுதியான தீர்மானத்தை அறிவிக்கவுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உள்நாட்டு வெளிநாட்டு கருத்து கணிப்பு அறிக்கைகள் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள நிலையில் அவற்றினை ஆராய்ந்த பின்னர் தீர்மானத்திற்கு வரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.வேட்பாளர் யார் அல்லது பிரச்சார மேடையில் ஏறுவதா இல்லையா என்பது தொடர்பில் தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மௌனம் கலைந்தவுடன் அரசியலில் பரபரப்பான நிலைமை ஒன்று ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாஸ, கோத்தபாய ராஜபக்ஷ, சமகால ஜனாதிபதியின் ஆதரவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!