தற்போதைய அரசாங்கத்தினால் அரச ஊழியர்களுக்கு எந்தவித நலனும் பெற்றுக்கொடுக்கப்பட வில்லை. புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அரச ஊழியர்கள் தொடர்பில் எந்தவிதமான சிறந்த வேலைத்திட்டமும் உள்ளடக்கப்பட வில்லை. ஆனால் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரச ஊழியர்களுக்கு பல சிறந்த கொள்கைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
கோத்தாபயவின் வெற்றி அறிவிப்பை தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக அறிவிக்கப்படுவார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியறிவிப்பை தொடர்ந்து பிரதமராக ரணில் விக்கிரமசிங்க அறிவிக்கப்பட்டாரை். .அதே போல் தான் மஹிந்த பிரதமராக அறிவிக்கப்பட்டு அதனடிப்படையிலே எமது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இராஜகிரியவில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – பொதுஜன பெரமுனவின் ஒன்றிணைந்த ஊடக சந்திப்பு மத்திய நிலையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இதில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
நாட்டின் சில பகுதிகள் தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக தென்மாகாணத்தில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மக்களுக்கான உதவிகளை செய்து கொடுப்பதற்காக நாம் பல ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.தேர்தல் சட்டத்திட்டங்களை மீறாத வகையில் ஜனாதிபதியினால் இந்த நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இதன்போது பாதிக்கப்பட்ட பிரதேச செயலகத்திற்கு 10 இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்படுவதுடன் , அவர்கள் அந்த பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த பணத்தை பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுப்பார்கள்.
தபால்மூல வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளன. இந்நிலையில் தபால் மூல வாக்களிப்பில் கலந்துக்கொள்ளும் அரச ஊழியர்கள் ஜனாதிபதி வேட்பாளர்கள் ,அவர்களின் கொள்கை திட்டங்கள் தொடர்பில் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிகாலத்தியே அரச ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் , அவர்களின் நலனுக்காக எந்தவித சிறப்பான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட வில்லை. ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அரச ஊழியர்களுக்கு என்று பெரிதாக ஒன்றும் உள்ளடக்கப்பட்டதாக தெரியவில்லை
எமது வேட்பாளர் கோத்தாபயவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரச ஊழியர்களுக்கு பயன்தரக்கூடிய பல திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவர் ஜனாதிபதியாக பதவியேற்கும் பட்சத்தில் அரச ஊழியர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு இந்த அரசாங்கம் எந்தவித முன்னுரிமையும் வழங்க வில்லை. ஆனால் கோத்தாபய அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயற்படுவார். அவர்களுக்கான பதவி உயர்வுகள் , சம்பள அதிகரிப்புகள் மற்றும் கொடுப்பனவுகளை உரியமுறையில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பார்.
சஜித் வெற்றி பெற்றால் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை பாதுகாப்புக்கு பொறுப்பாக நியமிப்பதாக அறிவித்துள்ளார். ஆனால் சரத் பொன்சேகா அவரது பதவிக்காலத்தின் போது பொலிஸாருடன் எவ்வாறான உறவை பேணினார் என்பது அனைவரும் அறிந்தவிடயமாகும். அவ்வாறு அவர் பதவிவகிக்க நேரிட்டால் அதன்போது அவர் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பார் என்பது தொடர்பிலும் அனைவருக்கும் தெரியும். பொன்சேகா தற்போது இராணுவ வீரர் போல் அல்லாது கோமாளியை போன்றே செயற்படுகிறார்.
தற்போதைய அரசாங்கத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடிகள் காரணமாகவே நாட்டில் பாரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்று சஜித்தின் பின்னால் இருப்பவர்கள் யார் ? இவர்கள்தான் இந்த மோசடிகளில் ஈடுப்பட்டுள்ளார்கள். அந்த மோசடியுடன் தொடர்பு கொண்டுள்ள அனைவரையும் சட்டத்தின் முன் கொண்டுவர எமது வேட்பாளர் கோத்தாபய நடவடிக்கை எடுப்பார். எமது வேட்பாளரின் பின்னால் எந்த மோசடிகாரர்களும் இல்லை.
கோத்தாபயவை எல்லோரும் இராணுவத்தில் கடமைபுரிந்தவராகவே பார்கின்றனர். ஆனால் அவரிடம் சிறந்த தலைமைத்துவ பண்பு மற்றும் அரசியல் கொள்ளைகளும் இருக்கின்றன. எதிர்காலத்தில் அவர் சிறந்த அரசியல் தலைவராக விளங்குவார் என்பதே எமது எண்ணம்.
கேள்வி: கோத்தாபய வெற்றி பெற்றபின்னர் பாராளுமன்றம் உடனே கலைக்கப்பட மாட்டாதே, அதனால் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுவீர்களா?
பதில்: இல்லை, அவர்களது கொள்கைகளுக்கும் , எமது கொள்கைகளுக்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு அதனால் எமக்கு அவர்களுடன் இணைந்து செயற்பட முடியாது. கோத்தாபயவின் வெற்றி அறிவிப்பை தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக அறிவிக்கப்படுவார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியறிவிப்பை தொடர்ந்து பிரதமராக ரணில் விக்கிரமசிங்க அறிவிக்கப்பட்டாரை். .அதே போல் தான் மஹிந்த பிரதமராக அறிவிக்கப்பட்டு அதனடிப்படையிலே எமது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
கேள்வி: உங்களால் 113 பாராளுமன்றத்திலங 113 உறுப்பினர்களின் ஆதரவினை திரட்ட முடியுமா?
பதில்: கோத்தாவின் வெற்றியை தொடர்ந்து 120 உறுப்பினர்களுடன் நாங்கள் வெற்றிகரமாக ஆட்சியமைப்போம்.
கேள்வி : உங்கள் கூட்டணியில் எந்தனை கட்சிகள் உள்ளடங்குகின்றன?
பதில்: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன , ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 15 கட்சிகள் உள்ளடங்கியுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு என்ற பெயரிலே எமது கூட்டணி அமையும்.
கேள்வி: கோத்தாபயவின் ஆட்சி காலத்தில் பொலிஸாருக்கு முன்னுரிமை வழங்குவதாக தெரிவித்தீர்கள், ஆனால் பெருந்தொகையான பொலிஸாரின் உயிரிழப்பிற்கு காரணமான கருணாஅம்மானை இணைத்துக் கொண்டுள்ளீர்களே?
பதில்: ஆம் அவர் அவ்வாறு முன்னர் செயற்பட்டிருந்தாலும்,புனர்வாழ்வு பெற்று வரும் போது அவரை இணைத்துக் கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லையே. குற்றவாளிகளுக்கு திருந்த சந்தர்ப்பம் வழங்குவதுபோன்று,இவர்கள் திருந்தி வந்ததின் பின்னர் அவர்களை இணைத்துக் கொண்டு செயற்படுவதில் எந்த தவறும் இல்லை. விடுதலை புலியைச் சேர்ந்த எந்தனையோ பேர் புனர்வாழ்வு பெற்று சிவில் பாதுகாப்பு பிரிவில் இணைந்துக் கொண்டுள்ளனர். திருந்தி வருபவர்களை இணைத்து செயற்படுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாதே.
கேள்வி: அர்ஜூனா மகேந்திரனை நாடுகடத்துவது தொடர்பில் பேசப்பட்டு வந்த போதும் , தற்போது அதில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது போல்தோன்றுகின்றதே?
பதில்: இல்லை அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இன்று அல்லது நாளை கூட அவர் அழைத்துவரப்படலாம். தேர்தல் காலத்தில் நாடுகடுத்தப்பட்டால் தேர்தலின் போது வாக்குளை பெறுவதற்காக அழைத்து வந்துள்ளார்கள் என்று தெரிவிப்பார்கள். ஆனால் உடனடியாக அவரை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுத்து வருகின்றனார். வெகுவிரைவில் அவர் நாடுகடத்தப்பட்டு மத்திய வங்கி பிணைமுறி மோசடிகளுடன் தொடர்புடைய அனைவரும் கண்டறியப்படுவர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!