எம்சிசி உடன்பாட்டை பகிரங்கப்படுத்தினார் மங்கள – மகிந்தவுக்கும் சவால்

அமெரிக்காவுடன் கைச்சாத்திடவுள்ள மிலேனியம் சவால் உடன்பாட்டின் வரைவை சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீர நேற்று பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.

480 மில்லியன் டொலர் கொடையை வழங்கும் மிலேனியம் சவால் நிறுவனத்துடன், சிறிலங்கா அரசாங்கம் உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு கடந்த செவ்வாய்க்கிமை அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருந்தது.

இந்த உடன்பாட்டுக்கு மகிந்த தரப்பு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருவதுடன், அதிபர் தேர்தலுக்கு முன்னர் இந்த உடன்பாட்டில் கையெழுத்திடக் கூடாது என்றும் வலியுறுத்தி வருகிறது.

இந்த உடன்பாட்டினால் நாட்டின் இறைமைக்கு ஆபத்து ஏற்படும் என்றும், இதனால் தான் இதுவரை பகிரங்கப்படுத்தப்படாமல் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்றும் மகிந்த தரப்பு புரளிகளைக் கிளப்பியுள்ளது.

இந்த நிலையில்,சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர, இந்த உடன்பாட்டின் இறுதி வரைவை வெளியிட்டுள்ளார்.

எம்சிசி உடன்பாட்டு வரைவு 84 பக்கங்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, இந்த உடன்பாட்டை வெளியிட்டுள்ள நிதியமைச்சர் மங்கள சமரவீர, இதனால் எவ்வாறு நாட்டின் இறைமைக்கு ஆபத்து ஏற்படும் என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு சவால் விடுத்துள்ளார்.

அதிபர் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு முயற்சிக்கும் போலி தேசபக்தர்களால் இந்த உடன்பாடு அரசியல் தீவனமாக பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!