சஜித்துக்கு ஆதரவளிக்க தமிழ் அரசுக் கட்சி மத்திய குழு முடிவு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்று காலை தொடக்கம் மாலை வரை, வவுனியாவில் நடைபெற்றது.

கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டத்தில், அதிபர் தேர்தலின் பிரதான வேட்பாளர்களான சஜித் பிரேமதாச மற்றும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரின் தேர்தல் அறிக்கைகள் விரிவாக ஆராயப்பட்டன.

இதையடுத்தே, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிப்பதென தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் தகவல் வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

“புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவை, அதிகாரபூர்வமாக அறிவிக்குமாறு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

எதிர்வரும் நாட்களில், கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் தலைவர்களுடனும் இது தொடர்பாக பேச்சு நடத்தப்படும்.

அதன் பின்னர் கூட்டமைப்பின் இறுதி நிலைப்பாடு அறிவிக்கப்படும்” என்று கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!