அதிபர் தேர்தலில் 13 டம்மி வேட்பாளர்கள் – கண்டுபிடித்தது தேர்தல்கள் ஆணைக்குழு

சிறிலங்கா அதிபர் தேர்தலில், இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், குறைந்தபட்சம் 13 போலி (டம்மி) வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அடையாளம் கண்டுள்ளது என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

“இந்த போலி வேட்பாளர்களில் ஏழு பேர் முக்கியமான ஒரு வேட்பாளருக்கு ஆதரவாகவும், ஏனைய ஆறு பேர் மற்றொரு முக்கிய வேட்பாளருக்கு ஆதரவாகவும் போட்டியில் இறங்கியுள்ளனர்.

இவர்களுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவுள்ளது.

இவர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், முக்கிய வேட்பாளர்களின் மேடைகளில் காணப்பட்டனர்.

தவிர, இந்த வேட்பாளர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் செயலாளர்கள், இரண்டு முக்கிய போட்டியாளர்களுக்கு ஆதரவான தேர்தல் பேரணிகளில் உரையாற்றியுள்ளனர்.

இந்தமுறை அதிபர் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிச்சுமை தேவையின்றி அதிகரித்துள்ளது.

வாக்குச்சீட்டு மிகவும் நீளமானதாக உள்ளது. மேலதிகமான வாக்குப் பெட்டிகளை பெற வேண்டியுள்ளது.” என்றும் அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!