டெங்குகாய்ச்சல் காரணமாக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பலர் வைத்திய சாலையில் அனுமதி

தற்போது யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் பருவ மழைகாரணமாக யாழ் பல்கலைக்கழக விரிவுரை மண்டபங்கள் , மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிகள் மற்றும் யாழ்பல்கலைககழக வளாகங்களில் அதிகளவான நுளம்பு பெருக்கத்தின் காரணமாகப் பல மாணவர்கள் நுளம்புக்கடிக்கு இலக்காகி டெங்கு நோய்க்குள்ளாகி உள்ளதுடன் பலர் வைத்தியசாலையில் சிகிச்சையும் பெற்று வருகின்றனர்.

குறித்த விடயம் தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்திற்குப் பல்கலைக்கழக மாணவர்கள் அறிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டினர்.

குறித்த விடயம் தொடர்பாக யாழ். பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரி க.கந்தசாமியிடம் வினாவியபோது யாழ் பல்கலைக்கழகத்தில் அதிகளவான மாணவர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக எமக்கு உத்தியபூர்வமாக எந்தவிதமான தகவலும் கிடைக்க வில்லை என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.பல்கலைகழகத்தில் டெங்குகாய்ச்சல் பரவல் தொடர்பாகக் கடந்த வாரம் சுகாதர உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடியதாகவும் அப்போது இரு மாணவர் களுக்கு மாத்திரமே டெங்குகாய்ச்சலால் பாதிப்படைந்தமை தெரியவந்தது.

இவ்விடயம் தொடர்பாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியிடம் வினாவியபோது யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து 20 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் டெங்கு காய்ச்சலுக்கு இலக்காகி சிகிச்சைகளைப் பெற்று வருகின்றனர் என்று கூறியதுடன் யாழ். மாவட்டத்திலே இந்தவருடம் மாத்திரம் 1991 பேர் டெங்குகாய்ச்சலுக்கு இலக்காகி உள்ளனர்.

அத்துடன், கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 456 பேர் டெங்குநோயால் பாதிப்படைந்துள்ளனர் என்றும் கூறியதுடன் கடந்த எட்டு நாட்களில் மாத்திரம் 276 பேர் டெங்குகாய்ச்சல் காணமாகச் சிகிச்சை பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!