இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- பங்களாதேசில் 15 பேர் பலி

பங்களாதேசில் இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்து காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிட்டங்கொங்கிலிருந்து பயணித்துக்கொண்டிருந்த புகையிரதமும் தலைநகர் டாக்காவிலிருந்து பயணித்துக்கொண்டிருந்த புகையிரதமும் பிரஹ்மன்பாரியா என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

புகையிரதங்கள் நேருக்குநேர் மோதியமையினால் சிட்டங்கொங்கிலிருந்து பயணித்துக்கொண்டிருந்த புகையிரதத்தின் மூன்று பெட்டிகள் முற்றாக சிதைவடைந்துள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது வரை 15 பயணிகளின் உடல்களை மீட்டுள்ளோம் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.40ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயணிகள் உறக்கத்திலிருந்தவேளையிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என உயிர்தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாரிய சத்தமொன்று கேட்டது, பயணிகள் அலறுவதை நான் பார்த்தேன் என ஒரு பயணி தெரிவித்துள்ளார்.

இரு புகையிரதங்களும் ஒரே தண்டவாளத்தில் எப்படி பயணித்தன என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!