கோத்தபாயவினால் முஸ்லிம்களுக்கு ஆபத்து: பைசல் காசிம்!

கோத்தபாயவின் ஊடாக முஸ்லிம் சமூகத்துக்கு வரவிருக்கின்ற ஆபத்தில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு சஜித்தை வெற்றி பெற வைப்பதைத் தவிர வேறு வழி கிடையாது என இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார். நிந்தவூரில் நேற்றிரவு இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், சஜித் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில் நாம் உள்ளோம். 51 நாள் பிரச்சினையின் போது ஒவ்வொரு நாளும் அலரிமாளிகையில் கூடி பேசுவோம். அப்போது எங்கள் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறினார் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் புதிய வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்று. சஜித்தையே அவர் பிரேரித்தார். பின்வரிசை எம்.பிக்கள் அதற்கு ஆதரவு வழங்கினார்கள். அதன் பின்னணியில் தான் சஜித் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். எமது தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றி வேட்பாளர்தான் சஜித். இவரை எதிர்த்து போட்டியிடுபவர் கோத்தபாய.

அவரை விவாதத்துக்கு வருமாறு சஜித் அழைத்து வருகிறார். கோத்தபாய மறுத்து வருகிறார். ஒரு விவாதத்துக்கே வர மறுப்பவரால் எப்படி நாட்டை ஆட்சி செய்ய முடியும்? கோத்தபாய மிகவும் ஆபத்தானவர். அவர் எமது தனியார் சட்டத்தில் கைவைக்கும் திட்டத்தில் உள்ளார். அவர் வந்தால் அது நிச்சயம் நடக்கும். எமது கலாச்சாரத்துக்கு எதிராக அந்த சட்டத்தைக் கொண்டுவருவதற்கு முயற்சி செய்கிறார். மத்ரஸாக்களை அரசின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சி செய்கிறார்.

முஸ்லிம்களுக்கு எதிராக இவ்வாறான சட்டங்கள் கொண்டுவரப்படும் போது எம்மால் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. அவரை நாம் தோற்கடித்தால் தான் இந்த ஆபத்துக்களில் இருந்து எமது சமூகம் தப்பும். இந்த விடயத்தில் முஸ்லிம்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். கோத்தபாயவின் ஊடாக எமது சமூகத்துக்கு வரவிருக்கின்ற ஆபத்தை இல்லாது செய்ய வேண்டும் என்றால் சஜித்தை வெல்ல வைப்பதைத் தவிர வேறு வழியில்லை என குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!