கடந்த அரசின் ஊழல்வாதிகளையும், திருடர்களையும் பிடிக்கத் தவறியதால், தற்போது வீரர்கள் திருடர்களாகவும், திருடர்கள் வீரர்களாகவும் மாறியுள்ளனர் என்று விசனம் தெரிவித்துள்ளார் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க.
நேற்று கடவத்தையில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “திருடர்களைப் பிடிப்போம் என்று பிரதமரும், ஜனாதிபதியும் வழங்கிய வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றவில்லை. திருடர்களைப் பிடிக்கவே மக்கள் அவர்களுக்கு அதிகாரத்தை வழங்கினர். ஆனால் அதை நிறைவேற்றவில்லை. இது நாட்டுக்குத் துரதிர்ஸ்டமே. அதனால் இன்று திருடர்கள் வீரர்களாகவும், வீரர்கள் திருடர்களாகவும் உள்ளனர். கடந்த அரசில் ஊழலில் ஈடுபட்டவர்கள் இன்று சுதந்திரமாக உள்ளனர். மூன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் எம்மால் இன்னமும் கடந்த காலத் திருடர்களைப் பிடிக்க முடியாதுள்ளது.
ஒரு பக்கம் கவலையாக இருந்தாலும் மறுபக்கம் மகிழ்ச்சியாக உள்ளது. காரணம் தற்போதைய அரசில் உள்ள திருடர்களையாவது பிடிக்க முடிந்துள்ளது. அர்ஜூன் அலோசியசிடம் பணம் பெற்ற 118 பேரின் பெயர்களைக் கட்டாயம் மக்கள் முன் வெளிக்கொணர வேண்டும். கூச்சலிட்ட சிலரின் உண்மையான முகங்கள் இப்போது வெளிவந்துள்ளன.
20 ஆவது திருத்தம் தொடர்பில் இப்போது சரியான முடிவை எடுக்க முடியாது. மக்கள் விரும்பும் அரசமைப்பே நாட்டுக்கு அவசியம். நான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு எதிரானவன் அல்ல. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் சாதகங்களும் உண்டு, பாதகங்களும் உண்டு. ஒருவர் அந்தப் பதவியில் அமரும் போது அதிகாரங்களைத் தவறாகவும் பயன்படுத்தலாம், சரியாகவும் பயன்படுத்தலாம். எனினும் நாட்டின் பாதுகாப்புக்கு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையையே அவசியமாகும்.என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!