வெளி மாவட்ட மீனவர்கள் இங்கு கடலட்டை தொழில் செய் வதற்கு அனுமதிக்க மாட்டோம். எம்மை இராணுவப் புலனாய் வாளர்கள் தொலைபேசியூடாக அச்சுறுத்துகின்றனர். நாம் அதற்குப் பயந்துவிட மாட்டாம். தொடர்ச்சியாக எதிர்ப்போம் என்று வடமராட்சி கிழக்கிலுள்ள உள்ளூர் தெரிவித்தனர்.
வடமராட்சி கிழக்குக் கடற்பரப்பில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள கடலட்டைத் தொழில் பிரச்சினை தொடர்பான அவசர கலந்துரையாடல் ஒன்று நேற்று வடமராட்சி கிழக்குப் பிரதேச செயலகத்தில் செயலர் தலைமையில் இடம்பெற்றது. அதில் இந்த விடயங்களை மீனவர்கள் சுட்டிக்காட்டினர்.
வெளிஇடங்களைச் சேர்ந்த மீனவர்கள் வடமராட்சிக் கடலில் கடலட்டைத் தொழில் ஈடுபடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளூர் மீனவர்களால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கடற்கரையில் வாடிகளை அமைத்துத் தொழிலில் ஈடுபடுகின்றனர். அதற்கு உள்ளூர் மீனவர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.
இது தொடர்பில் பருத்தித்துறைப் பிரதேச சபை அமர்விலும் கலந்துரையாடப்பட்டது. எமது கடல் பகுதியில் கடலட்டையை சட்டவிரோதமாகப் பிடிக்கின்றனர். இது தொடர்பாக சபைத் தலைவர் தலைமையில் அண்மையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பில் எமது சபை நடவடிக்கையைத் தொடர வேண்டும் என்று பிரதேச சபை உறுப்பினர் சுரேஷ்குமார் கோரியிருந்தார்.
கற்கோவளம் கடற்பகுதியிலும் கடலட்டை பிடிக்கப்படுகின்றது. புத்தளம் , கற்பிட்டி, சிபத்தைச் சேர்ந்தவர்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டு எங்கள் கடல் வளத்தைச் சுரண்டுகின்றார்கள். எம்மவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது. இதைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றபவேண்டும் என்று பிரதேச உறுப்பினர் த.சந்திரதாஸ் கோரிக்கையிருந்தார்.
இந்தப் பிரச்சினை தொடர்பில் மருதங்கேணிப் பிரதேச செயலர் ஆராய்வார் என்று பிரதேச சபைத் தலைவர் அமர்வில் தெரிவித்திருந்தார். நேற்று இது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.
“கடல் வளம் அழிகின்றது, கலாசாரச் சீர்கேடுகள், இனப்பரம்பலை மாற்றியமைத்தல், சுகாதாரச் சீர்கேடுகளை ஏற்படுத்தல் எனத் தொடர்ச்சியாகப் பாதகமான செயற்பாடுகள் ஏற்படுத்தப்படுகின்றன. இது பிரதேசத்தின் பிரச்சினை அல்ல. எமது இனத்தின் பிரச்சினை. பிரதேசசபை, மாவட்டச் செயலர், வடக்கு மாகாண சபை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். கடற்கரையானது அலங்கோலமாகிச் சூறையாடப்பட்டு அழிவடைகின்ற நிலைக்கு வந்துள்ளது. எமது சொத்தை தொடர்ந்து அழிவடையும் நிலைக்குக் கொண்டு செல்லவிடமாட்டோம்.”- என்று உள்ளூர் மீனவர்கள் தெரிவித்தனர்.
இந்தப் பிரச்சினை தொடர்பில் வியாழக்கிழமை மருதங்கேணி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!