மாணவியைக் கடத்தியவர்களை கைது செய்யாத பொலிஸ்!

கிளிநொச்சியில் மாணவியைக் கடத்தியவர்களைக் கைது செய்வதில் பொலிஸார் அசமந்தம் காட்டுவதாக பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளனர்.

கடந்த மாதம் 18 ஆம் திகதி பாடசாலை மேலதிக வகுப்புக்காக சென்று கொண்டிருந்த மாணவி, காரில் வந்த சிலரால் கடத்தப்பட்டார். சுமார் 3 மணித்தின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இது குறித்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்த முறைப்பாடு செய்யப்பட்டது. இதன்போது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் இலக்கம், கடத்திய நபர் ஒருவரின் புகைப்படம், தொலைபேசி இலக்கம் என்பன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. எனினும் போதுமான ஆதாரங்கள், தடயங்கள் இருந்தும் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட எவரும் சம்பவம் நடந்து ஒரு மாதமாகியும் கைது செய்யப்படவில்லை.

இது குறித்து தாம் பொலிஸாரிடம் வினவியபோதும் அவர்கள் அலட்சியமாக பதில் தருவதாகவும் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் தெரிவித்தனர்.

இந்நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கத்தவறிய பொலிஸாருக்கு எதிராக யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் முறையிட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!