ஈஸ்டர் தாக்குதல் குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்களுக்கு எதிராக வழக்கு!

சமூக ஊடகங்களில் இஸ்லாமிய மதத்திற்கு களங்கம் ஏற்படும் வகையிலான கருத்துக்களை பதிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் டுபாயில் கைது செய்யப்பட்ட மூன்று இலங்கையர்கள் தொடர்பான வழக்கு டுபாய் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

துபாயில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் பாதுகாப்பு காவலர்களாக பணிபுரிந்து வந்த குறித்த மூன்று இளைஞர்களும் இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கடந்த மே மாதம் இஸ்லாமிய மதத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக குறித்த விடுதி ஊழியர்களால் அந்த நாட்டு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டது.

அதற்கமைய குறித்த மூன்று இலங்கையர்களும் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து அவர்கள் பயன்படுத்திய கையடக்க தொலைபேசிகளையும், மடிகணினிகளையும் பொலிஸார் விசாரணைகளுக்காக கையகப்படுத்தினர்.

அதற்கமைய இன்றைய தினம் வழக்கு விசாரணைகளில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த மூன்று இளைஞர்களும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளதுடன் மாறாக தமது நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் மாத்திரம் சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக கூறியுள்ளனர்.

இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 22 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!