நாட்டை பிளவுபடுத்தும் நோக்கில் மாணவர்களை இலக்காக கொண்டு சதித்திட்டங்கள் : பிரதமர் விசனம்

நாட்டை பிளவுபடுத்தும் நோக்கில் சிங்கள பௌத்த மக்களை சீர்குலைப்பதற்காகவும் , அனைத்தின மக்களின் குடும்ப நிலைமைகளை பாதிப்படையச் செய்து பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கிடையில் காணப்படும் உறவையும் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையில் காணப்படும் தொடர்பினையும் , பிள்ளைகள் மதங்களுடன் கொண்டுள்ள தொடர்பினையும் சீர்குழைப்பதற்காக எதிர்கால சந்ததியினரை இலக்காகக் கொண்டு சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசனம் வெளியிட்டார்.

மாணவர்களின் பாடப்புத்தங்களில் இது போன்ற பாடத்திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு செயற்படுபவர்கள் தொடர்பில் இணங்கண்டு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

அகில இலங்கை அறநெறி பாடசாலை பரிசளிப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை வவுனியா – இரட்டைபெரிய குளம் பிரதேசத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்த பிரதமர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

எதிர்கால சந்ததியினர் மத்தியில் அடிப்படைவாதத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பாடசாலை மாணவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர்.

இன்று பௌத்த அறநெறிகளில் கல்வி கற்றுவரும் பிள்ளைகளே நாளை பௌத்த சமயத்தை அடையாளப்படுத்தப் போகின்றனர். சிங்கள பௌத்த கலாசாரம் தொடர்பில் இவர்கள் விகாரைகளினூடாகவே கற்றுக் கொள்கின்றனர். இதேபோல் நாடு மற்றும் நாட்டு மக்கள் தொடர்பில் பாடசாலை கல்வியினூடாகவே மாணவர்கள் கற்றுக் கொள்கின்றனர்.

இன்று பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்படுகின்ற பாடப்புத்தகங்களிலும் அவர்களின் மனதை பாதிக்கும் வகையிலான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பல தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சில பாடப்புத்தகங்களில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் ஒரு மாகாணமாக காட்டப்பட்டுள்ளதாகவும் , சிங்கள புத்தாண்டு தொடர்பான படங்களும் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!