மக்களே..!எனது கொள்கையினை செயற்படுத்தும் அரசாங்கத்தை பெரும்பான்மை ஆதரவுடன் தெரிவு செய்யுங்கள்

ஜனாதிபதியாக என்னை தெரிவு செய்ததைபோல எனது கொள்கையினை செயற்படுத்தும் அரசாங்கத்தை பெரும்பான்மை ஆதரவுடன் தெரிவு செய்யுங்கள். மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றாவிடின் நானும் புறக்கணிக்கப்படுவேன். அரச நிறுவங்கள் மீதான கண்காணிப்பு தொடரும் என ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இன்று வியாழக்கிழமை இடம் பெற்ற பொதுஜன பெரமுனவின் இளைஞர் சம்மேளனத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்ப்பிட்டார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் தவறான வழியில் பயணிக்கும் போது மக்களாலே அந்த அரச தலைவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள். கடந்த அரசாங்கம் மக்களின் ஆதரவுடனும், பாரிய எதிர்பார்ப்புக்களின் மத்தியிலும் அமைக்கப்பட்டது. அரசாங்கம் என்ற ரீதியில் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றாமையினால் அந்த அரசாங்கத்தை புறக்கணித்து மக்கள் என்னை தெரிவு செய்துள்ளார்கள்.

கோத்தபய ராஜபக்ஷ என்ற நபரை தொடர்ந்து ஜனாதிபதியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு அல்ல, நாட்டின் முன்னேற்றமும், கௌரவமான வாழ்க்கையினையும், சுய பொருளாதார முன்னேற்றத்தையுமே மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றாவிடின் நானும் ஜனநாயக ரீதியில் புறக்கணிக்கப்படுவேன் என்றார்.

மேலும், ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்று குறுகிய காலத்திற்குள், பல விடயங்கள் வெற்றிக் கொள்ள முடிந்துள்ளது. எமது தேர்தல் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட செயற்திட்டங்கள் முழுமையாக செயற்படுத்தப்படும். அதற்கு எனது கொள்கையுடன் ஒத்துப்போகின்ற பலமான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும். பெரும்பான்மை ஆதரவுடனான அரசாங்கத்தை அமைக்க வேண்டும்.

21ம் நூற்றாண்டு தகவல் தொழினுட்பத்தை முன்னிலைப்படுத்தி முன்னேற்றமடைகின்றது. அதற்கேற்ற வகையில் இலவச கல்வி முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் கல்வி முறைமையினை இலவசமாக வழங்கினால் தொழிலுக்கான கேள்வி தோற்றம் பெறாது. தேர்தல் காலத்தில் இளைஞர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் பதவி காலத்திற்குள் முழுமையான செயற்படுத்துவேன் என மேலும் தெரிவித்தார் .

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!