மஹபொல புலமைப்பரிசில் பெறும் மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான விடயம் வெளிவந்துள்ளது..!!

மஹபொல புலமைப்பரிசில் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவு 7000 ரூபாயாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.தற்போது மாணவர்களுக்கு 5000 ரூபாய் மாதாந்திர கொடுப்பனவு வழங்கப்படும் நிலையில் இது பல்கலைக்கழக விடுதியில் தங்கும் அவர்களின் செலவுகளை ஈடுகட்ட போதுமானதாக இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அத்துடன் ஒவ்வொரு மாதமும் 15 ஆம் திகதிக்கு முன்னர் இந்த உதவித்தொகையை மாணவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக அனுப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் மஹபொல உதவித்தொகை நிதியம் இப்போது வெறும் 10.5 பில்லியன் ரூபாயாக குறைந்துள்ளதாகவும் அதனை மேலும் அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அதன்படி, மஹபொல நிதிக்காக பிரத்தியேகமாக ஒரு புதிய லொட்டரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் இந்த நிதிக்கான பணத்தை திரட்டுவதற்காக விரைவில் மஹபொல கண்காட்சி மற்றும் வர்த்தக கண்காட்சியை மீண்டும் நடத்த தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை பொதுத்தேர்தலின் பின்னர் மாணவர் ஒருவருக்கு வழங்கப்படும் கொடுப்பனவை 10,000 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என அந்தரே மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!