தமிழ் மக்களின் வாக்குகளை சிங்கள உறுப்பினர்களுக்கு கொடுக்கும் அரசாங்கத்தின் ஏஜெண்ட்கள்?

தமிழ் பேசும் மக்களுடைய வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக, தமிழ் பேசும் மக்களுடைய வாக்குகளை பிரித்தாள்வதற்காக, தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களை குறைப்பதற்காகவும் சதியை இந்த அரசாங்கத்தின் ஏஜெண்டுகள் மாவட்ட ரீதியாக செய்து வருவதாக முன்னால் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினறுமான ரிஸாட்பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை மாந்தை மேற்கு பகுதியில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறுபான்மை மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டிய ஒரு தேர்தலாக வருகின்ற தேர்தலை நாங்கள் பார்க்கிறோம்

இந்த அரசாங்கத்தின் வருகையோடு இனவாதத்தையும் மதவாதத்தையும் கக்கி அதை மூலதனமாக கொண்டு அரசியல் செய்கின்றவர்கள் இந்த நாட்டிலே எல்லோருக்கும் ஒரே சட்டம் தான் இருக்க வேண்டுமென்று சிறுபான்மையினருக்கான பல்லாண்டு காலமாக இருந்து வருகின்ற உரிமைகளை கூட இல்லாமல் ஆக்க வேண்டும் என்று பேசி வருவதை நாங்கள் பார்க்கிறோம்.

அதே போல இன்னும் ஒரு சிலர் இந்த நாட்டிலே ஜனநாயக அரசியலுக்குள் வந்த சிறுபான்மை கட்சிகள் சிறிய கட்சிகளை எல்லாம் ஒழித்துக் கட்ட வேண்டும் என்று வீரியம் பேசுகின்றவர்களும் இந்த அரசாங்கத்தில் ஒரு ஆதரவாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறான நிலை இந்த நாட்டிலே சிறுகட்சிகளையும் சிறுபான்மை சமுதாயத்தையும் ஜனநாயகத்தை நம்பி வாழுகின்ற மக்களுடைய எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்குகின்ற ஒரு சதியாகவே நாங்கள் பார்க்கிறோம்.

எனவே வரப்போகின்ற தேர்தல் இந்த நாட்டின் ஜனநாயகத்தை விரும்புகின்றவர்கள் இந்த நாட்டிலே எதிர்காலத்தில் ஒரு இனக்கலவரம் வந்துவிடாமல் எதிர்காலத்திலே எல்லோரும் ஒரே சமூகமாக சகோதரத்துவத்துடனும் சமாதானமாகவும் எல்லா உரிமைகளும் பெற்று வாழ்கின்ற ஒரு நிலை வர வேண்டுமாக இருந்தால் சிந்தித்து வாக்களிக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

தமிழ் பேசும் மக்களுடைய வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக தமிழ் பேசும் மக்களுடைய வாக்குகளை பிரித்தாள்வதற்காக தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களை குறைப்பதற்காக சதியை இந்த அரசாங்கத்தின் ஏஜெண்டுகள் மாவட்ட ரீதியாக செய்து வருவதை நாங்கள் பார்க்கிறோம்.

எனவே இந்த தேர்தலிலே அவ்வாறான சதிகாரர்களின் சதி வலைக்குள் சிறுபான்மைச் சமூகம் ஏமாந்துவிடாமல் ஒன்றுபட்டு தங்களுடைய பிரதிநிதிகளை தமக்காக தைரியமாக தன்மானத்தோடு வாழ ஒரு நிலையை ஏற்படுத்துவதற்காக உழைக்கின்ற நாடாளுமன்ற பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!