நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மேஜர் அஜித் பிரசன்ன கைது!

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, தாய்நாட்டிற்கான படையினர் அமைப்பின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இன்று மன்றில் முன்னிலையான அவரை, எதிர்வரும் 07ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தம்மிக கனேபொல இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். அத்துடன் அவரது மனநிலை குறித்து அறிக்கை ஒன்றையும் சமர்பிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் உள்ளிட்ட 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு தொடர்பில் நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டிலேயே, முன்னாள் இராணுவ மேஜரும், குறித்த வழக்கின் எதிரிகள் சார்பு சட்டத்தரணியுமான அஜித் பிரசன்ன கைது செய்யப்பட்டுள்ளார்.

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கின் சந்தேக நபர்களான கடற்படையை சேர்ந்த துஷார மென்டிஸ், கஸ்தூரிகே காமினி ஆகியோருடன் இணைந்து கடந்த மாதம் 9ம் திகதி மேஜர் அஜித் பிரசன்ன நடத்தி ஊடக சந்திப்பில், நீதிபதிகள், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள், பொலிஸார் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பிலான சட்டத்தரணிகள் ஆகியோருக்கு எதிராக கருத்துக்களை முன்வைக்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!