கொரோனாவைப் பயன்படுத்தி சீன எதிர்ப்பு அலையை உருவாக்க வேண்டாம்!

கொரோனா வைரஸை பயன்படுத்தி சீன எதிர்ப்பு அலையை எவரும் உருவாக்க வேண்டாம் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

”கொரோனா வைரஸ் காரணமாக நாட்டிலுள்ள ஏனைய வைரஸ்கள் தொடர்பில் தற்போது எவரும் பேசுவதில்லை. ரஞ்சன் ராமநாயக்கவின் செயற்பாடுகளை மறந்துள்ளனர். தினம் தினம் நாட்டில் பலர் டெங்கு நோய்க்கு உள்ளாகுகின்றனர். கொரோனா வைரஸ் போன்று டெங்குவை ஒழிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிலர் சீன நாட்டவரை கண்டால் அருகில் செல்லவும் அச்சப்படுகின்றனர். இந்நாட்டில் பல வருடங்களாக வசிக்கும் சீனர்களை கண்டாலும் அச்சமடைகின்றனர். வேலைத்தளங்களிலும் சீனர்கள் அருகில் எவரும் செல்வதில்லை. அவ்வாறு எவரையும் ஒதுக்கி வைப்பது நல்லதல்ல.

சீனா இலங்கைக்கு பாரிய உதவிகளை வழங்கியுள்ளது. அவற்றை மறக்கக் கூடாது. இன்றளவும் பாரிய அபிவிருத்திகளையும் உதவிகளையும் முதலீடுகளையும் சீனா இலங்கைக்கு வழங்குகிறது. அவர்களுடைய நாட்டில் ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அது உலகளாவிய ரீதியில் பரவலடைகிறது.

எமது நாட்டுக்குகள் வைரஸ் பரவாமல் இருப்பதை தடுக்கவே நாம் செயற்பட வேண்டும். சர்வதேசத்துடன் சிறந்த உறவை நாம் கட்டியெழுப்பியுள்ளோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!