ஐ.தே.மு: பெயர்,சின்னம் வார இறுதிக்குள் தீர்மானம்!

ஐக்கிய தேசிய முன்னணியில் தேசிய கூட்டணியின் பெயரும்,சின்னமும் இவ்வார இறுதிக்குள் தீர்மானிக்கப்பட்டு எதிர்வரும் திங்கட்கிழமை கூடவுள்ள ஐ.தே.க. செயற்குழுவில் அங்கீகாரம் பெறப்படுமென, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.

இதன் பின்னர் தேர்தல் திணைக்களத்தில் இதைப் பதிவு செய்வதற்கு முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த ஐக்கிய தேசிய முன்னணி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரான சஜித் பிரேமதாஸ தலைமையில் இக் குழுக்கூட்டம் நடைபெற்றது.

புதிய கூட்டணிக்கான பெயர், சின்னம் என்பவற்றை இவ்வார இறுதிக்குள் தீர்மானித்து அடுத்தவாரம் கூடும் கட்சியின் செயற்குழுவில் அங்கீகாரமும் கோரப்படவுள்ளது. மேலும் அன்றைய தினம் ஐ.தே.மு. தலைமையை ஏற்பதற்கான முடிவை சஜித் பிரேமதாஸ தெரிவிக்கவுள்ளதுடன், அதன் செயலாளராக ரஞ்சித் மத்துமபண்டாரவின் பெயரும் அறிவிக்கப்படவுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகள் அனைத்தும் புதிய தேசிய கூட்டணியில் இணைந்து செயற்படவுள்ளன. இந்த தேசிய கூட்டணியூடாக பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இதுவரையில் முன்னணியுடன் இணையாத சிறிய கட்சிகளை, இணையுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அழைப்பு விடுக்கவுள்ளார். இதேசமயம் தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளும் இம் மாதம் 15 ஆம் திகதிக்குப் பின்னர் ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை இன்று வியாழக்கிழமை கூடவிருந்த ஐ.தே.க செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 10ஆம் திகதி திங்கட்கிழமை வரை பிற்போடப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீகொத்தா வட்டாரம் தெரிவித்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!