இணைத்தலைவர் பதவியை மைத்திரி கோரவில்லை!

பொதுஜன பெரமுன கூட்டணியின் இணைத்தலைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரவில்லை என இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

‘பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைக்கவுள்ள கூட்டணியில் இணைத்தலைவர் பதவி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட வேண்டுமென கூறுவது சோடிக்கப்பட்ட ஒன்று. சுதந்திர கட்சியினரிடமிருந்தோ, அல்லது அக்கட்சின் தலைவரிடமிருந்தோ அவ்வாறான எந்தவொருக் கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் பொலன்னறுவையிலிருந்து ஆட்சி செய்யப் போவதாகக் கூறினார். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. மேலும் தான் மீண்டும் அரசியலுக்கு வரப்போவதில்லை எனவும் அந்நிகழ்வில் மைத்திரி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மீண்டும் சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அரசியலுக்கு வந்தால் அன்று தான் அறிவித்திருந்தது தவறெனவும் அரசியலுக்கு மீண்டும் வரக்கூடாதென தனக்கிருந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டதாகவும் மைத்திரிபால சிறிசேன கூற வேண்டும்.

ஏனைய நாடுகளுடன் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கைகளால் நாட்டினுடைய தேசிய வளங்கள் உடன்படிக்கை செய்துக்கொள்ளப்படும் நாட்டின் அதிகாரத்துக்குள் வருமாக இருந்தால் அவ்வாறான உடன்படிக்கைகளை ஒருபோதும் செய்துகொள்ள மாட்டோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!