துபாய் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்த கேரள இளைஞர் பலி!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் பகுதியை சேர்ந்த சபீல் ரகுமான் (25) என்பவர் இன்ஜியராக பணிபுரிந்து வருந்தார். இவர் 2018-ம் ஆண்டு முதல் துபாயில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை சபீல் ரகுமான் தான் வேலை செய்து வந்த சிலிகான் ஒசிஸ் என்ற இடத்திற்கு அருகே இருந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்திற்கு சென்றுள்ளார். அந்த கட்டிடத்தின் 18-வது மாடியில் சுற்றுப்பார்த்துக்கொண்டிருந்த ரகுமான் எதிர்பாராத விதமாக கட்டிடத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சபீல் ரகுமானின் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து முதற்கட்ட விசாரணை மேற்கொண்ட போலீசார் ரகுமான் அந்த கட்டிடத்தில் ஒரு வீட்டில் வாடகைக்கு எடுக்கவே அங்கு சென்றதும், 18-வது மாடியில் உள்ள வீட்டை தனியாக சென்று பார்த்தபோது எதிர்பாராத விதமாக தவறிவிழுந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், ரகுமானின் உடலை இந்தியா கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!