ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் அல்லது தனிநபர்களால் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக சுமத்தப்படும் எந்த குற்றச்சாட்டுக்கும் பதிலளிக்க தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
ஜெனீவா புறப்பட்டு செல்வதற்கு முன்னர் கொழும்பில், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.
”ஜெனீவா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கப்பட்டமை இலங்கையின் அரசியலமைப்பை முற்றிலும் மீறய செயற்பாடாகும். மக்களின் அனுமதியின்றியே இவ்வாறு இணை அனுசரணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானத்துக்கு வழங்கப்பட்ட இணை அனுசரணையை வாபஸ் பெறுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தீர்மானம் எடுத்ததுள்ளது. எமது நாட்டுக்கு எதிராக சர்வதேசம் பூட்டியுள்ள விலங்கை நாம் அகற்ற வேண்டும். இதற்காகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மக்களின் ஆணை கிடைத்துள்ளது.
நாட்டுக்கு எதிராக கடந்த அரசாங்கம் செயற்பட்டதாலே எவ்வாறான நிலைமையை எதிர் கொண்டுள்ளோம். நாட்டுக்கு எதிரான கருத்துகளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்து வருகிறது. எமது அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் உறுப்பு நாடுகளுக்கு அறிவித்துள்ளோம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட 30/1 தீர்மானத்துக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய இணை அனுசரணையை வாபஸ் பெறும் உத்தியோகபூர்வ அறிவிப்பு பேரவையில் நாளை அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!