சீனாவில் உருவாகியிருக்கும் புதிய வைரஸ் – ஒருவர் பலி!

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் சூறாவளியாகத் தாக்கி ஓய்வை நோக்கி சென்றுவரும் நிலையில், ஹண்டா வைரஸால் ஒருவர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஊஹான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் விலங்குகளிடம் இருந்து வைரஸ் ஒன்று மனிதர்களுக்கு பரவியது. கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சார்ந்த அந்த வைரஸுக்கு கோவிட் 19 என்று பெயரிடப்பட்டது. சீனாவில் அதிவேகமாக இந்த வைரஸ் பரவிய நிலையில், உலகம் எச்சரிக்கை ஆனது. எனினும், இந்த வைரஸுக்கு தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லாததால் உயிரிழப்பை தடுக்க முடியவில்லை. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தும் பணி சிக்கலானது என்பதால், வைரஸ் சீனாவைத்தாண்டி வெளிநாடுகளுக்கும் பரவத்தொடங்கியது.

தற்போது வரை உலகம் முழுவதும் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 3 லட்சத்து 86 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 16 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். மனித குலத்திற்கே அச்சுறுத்தல் என்று உலக சுகாதார அமைப்பு கொரோனாவை அறிவித்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான் என்று பல நாடுகள், தனியார் நிறுவனங்கள் கோவிட் 19 வைரஸ் தடுப்பு மருந்தை கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. சீனாவில் தற்போது படிப்படியாக கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. இந்த நிலையில், அங்கு ஹண்டா வைரஸ் பரவி வருகிறது.

யுனான் மாகாணத்தில் இருந்து ஷடாங் மாகாணத்திற்கு பஸ்ஸில் சென்று கொண்டு இருக்கும்போது, ஒருவர் இறந்தார். இவரை சோதித்துப் பார்த்ததில் அவருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது.ஹண்டா வைரஸானது எலி, பெருச்சாளி போன்ற கொறித்து தின்னும், வலுவான பற்களை கொண்ட பிராணிகள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. கொரோனா உள்ளிட்ட மற்ற வைரஸ்களைப் போல மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவாது என்பது ஆறுதல் தரும் செய்தி. இந்த வகை வைரஸ்கள் வெகு சீக்கிரத்தில் யாரையும் தாக்காது. ஆனால், தாக்கினால், உடனடியாக கண்டுபிடித்து சிகிச்சை செய்து கொள்ளாவிட்டால், நோயாளிகள் இறக்கும் அபாயம் உள்ளது. அதிக அளவில் இந்த வைரஸ்கள் இன்னும் பரவவில்லை.

இருப்பினும், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டால், எதிர்காலத்தில் இது போன்ற எலி வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. நீண்ட காலம் பயன்படுத்தப்படாமல் இருந்த அறையில், மேஜைகளில் எலிகள் இருந்தால், அவற்றின் கழிவுகள் காணப்படும். நாட்கணக்கில் இந்த கழிவுகள் வறண்டு போய், தூசாக கிளம்பும். இந்த தூசியை சுவாசிக்கும் சிலருக்கு, ‘ஹண்டா வைரஸ்’ தொற்றும். சுவாச மண்டலத்தைத்தான் இது முதலில் பாதிக்கும். தொடர்ந்து மர்ம காய்ச்சல், ரத்தத்தில் சிவப்பு அணுக்களில் பாதிப்பு என தொற்றுக்களை ஏற்படுத்தும். இது உயிரிழப்பு வரை செல்லக்கூடும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!