நாட்டைப் பிளவுப்படுத்தும் எந்த உள்ளடக்கமும் 20ஆவது திருத்தத்தில் இல்லை. விமர்சிப்பவர்கள் முடியுமானால் நிரூபித்துக்காட்டட்டும். அத்துடன் பலதரப்பினருடன் கலந்துரையாடியே இதனை தயாரித்தோம் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நாட்டைப் பிளவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என தெரிவிக்கப்படுவது தொடர்பாக வினவியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து கூறுகையில்,
நிறைவேற்று ஜனாதிபதி என்ற பெயரில் இருந்து நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முழுமையாக நீக்குவதற்கு, புதிய அரசியலமைப்பு கொண்டுவர நாங்கள் விருப்பமாகவே உள்ளோம். என்றாலும் தற்போது அவ்வாறான எதனையும் செய்யமுடியாது.
நாங்கள் கொண்டுவந்திருக்கும் திருத்தத்தில் அவ்வாறு எதுவும் இல்லை. 78 அரசியலமைப்பு ஊடாக இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்கவே நாங்கள் 20ஆம் திருத்தத்தினூடாக மேற்கொண்டுள்ளோம்.
20ஆம் திருத்தத்தை நாங்கள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்த பின்னர் அதனை வாசித்து பார்க்காமலே, அது நாட்டை பிளவுப்படுத்தும் பிரேரணை என சிலர் பிரசாரம் செய்துவருகின்றனர். அவ்வாறான ஒரு வாக்கியம் எனும் எமது பிரேரணையில் இருக்குமாக இருந்தால் காட்டட்டும். இல்லாத விடயத்தை தெரிவித்து இந்த திருத்தத்தை இல்லாமலாக்க முயற்சிக்கவேண்டாம்.
இந்த பிரேரணையை அங்கிகரித்துக்கொள்ள மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்கு செல்லவேண்டும் என யாரும் தெரிவிப்பதாக இருந்தால், அதற்கும் நாங்கள்தயார். அப்போது மக்களின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ளலாம். மேலும் இந்த திருத்ததில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பணத்துக்கு விற்கப்படுவதை தடுத்துள்ளோம். தற்போது எமது பிரேரணையை விமரிசிப்பவர்களும் பணத்துக்கு விலைபாேனவர்களாகும்.
அத்துடன் 20ஆவது திருத்தத்தை நாங்கள் எமது தேவைக்கு ஏற்றவிதத்தில் தயாரிக்கவில்லை. இதனை தாரிக்கும்போது பலதரப்பினருடன் கலந்துரையாடி திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம். இதில் இன்னும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என யாரும் தெரிவித்தால் அதுதொடர்பாக கலந்துரையாட நாங்கள் தயாராகவே இருக்கின்றோம் என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!