தேசிய அரசாங்கத்தில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகள் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக தெரிவித்தார்.
நாட்டின் பிரதான பிரச்சினைகளை வெற்றி கொள்வதில் இன்று எமக்கு பாரிய சவால்கள் உள்ளன. பிரதான இரண்டு கட்சிகளும் இணைந்தே இந்த சவால்களை வெற்றிகொள்ள வேண்டியுள்ளது. எனினும் தேசிய அரசாங்கத்தில் குழப்பங்கள் உள்ளதாக கூறும் கதைகள் அனைத்தமே பொய்யானவையாகும். பிரதமரும் ஜனாதிபதியும் முரண்படுவதாக கூறி மக்களை சிலர் குழப்பி வருகின்றனர். எமது அணியிலும் சிலர் அவ்வாறான தவறான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
எனினும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் எந்த முரண்பாடுகளும் இல்லை. கருத்து கூறுவதன் மூலமாக சில தவறுகளை சுட்டிக்காட்டுவதை ஜனாதிபதி பிரதமருடன் முரண்படுகின்றார் என்ற அர்த்தம் கொள்ளத்தேவையில்லை. தொடர்ந்தும் தேசிய அரசாங்கமாக பயணிக்க இருவருமே தயாராக உள்ளனர்.
அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் கொள்கை ரீதியிலான பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் அவற்றை பேச்சுவார்த்தைகள் மூலமாக வெற்றிகொள்ள முடியும், அதேபோல் எமது கட்சியில் உள்ள முரண்பாடுகளையும் வெற்றிகொள்ள முடியும். உடனடியாக தேசிய அரசாங்கத்தை கலைக்க முடியாது. ஜனாதிபதி ஒரு கட்சியில் இருக்கையில் நாம் கட்சியை விட்டு வெளியேறி இறுதியில் ஜனாதிபதியை நெருக்கடியில் தள்ள முடியாது. ஆகவே புரிந்துணர்வு அடிப்படையில் பிரதான இரண்டு கட்சிகளும் இணைந்து பயணிக்க வேண்டியுள்ளது என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!