பாகிஸ்தானில் பயங்கரம்: தனது குடும்பத்தை உயிருடன் தீயிட்டு கொளுத்திய இளைஞர்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மூன்று சகோதரர்கள் மற்றும் பெற்றோரை தீயிட்டு கொளுத்தி கொலை செய்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஏப்ரல் பிற்பகுதியில் தஸ்கா நகரின் முகமதுபுரா பகுதியில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் குற்றவாளியை மே 10, ஞாயிற்றுக்கிழமை மாகாண பொலிசார் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் 25 வயதான அலி ஹம்சா என அடையாளம் காணப்பட்டார் என்றும் அவரது கெட்ட பழக்கங்கள் மற்றும் போதைப் பழக்கத்தின் காரணமாக அவரது குடும்பத்தினருடன் சண்டையிட்டு வந்துள்ளார் எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

அவர்கள் தூங்கும்போது குடும்பத்தினர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக ஹம்சா பொலிசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மட்டுமின்றி தீ விபத்து ஏற்பட்டு மொத்த குடும்பமும் கொல்லப்பட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்றதாகவும் அஹம்சா பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

அவரது தந்தை முஹம்மது அஷ்ரப் மற்றும் தாய் யஸ்மீன் பிபி ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர், சகோதரிகள் சோபியா மற்றும் ஃபவுசியா மற்றும் சகோதரர் ஹைதர் ஆகியோர் சில நாட்களுக்குப் பிறகு லாகூரின் மாயோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். ஹம்சாவின் இளைய சகோதரி ஹர்ரம் ஷெஹ்ஜாதி மற்றும் சகோதரர் அலி ராசா ஆகியோர் தீக்காயங்களுடன் இன்னமும் தங்கள் உயிருக்கு போராடி வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!