முகமாலையில் செவ்வாயன்று தோண்டும் பணி! – நீதிவான் உத்தரவு

முகமாலையில் பெருந்தொகை எலும்புக்கூடுகளும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சீருடைகள் மற்றும் துப்பாக்கிகள் சிலவும் நேற்று மீட்கப்பட்டுள்ள நிலையில், இவ்விடத்தில் செவ்வாய்கிழமை அகழ்வுப் பணிகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் நிறுவன பணியாளர்கள் இந்த புதைகுழி தொடர்பில், பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து அவ்விடத்துக்குச் சென்ற பளை பொலிஸார், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில், கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவ்விடத்துக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்ட கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் த.சரவணராஜா, இம்மாதம் 26ஆம் திகதியன்று, குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டார்.

குறித்த எலும்புக்கூடுகள், விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளுடையதாக இருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், எலும்புக்கூடுகள் மற்றும் சீருடைகள் மீட்கப்பட்ட இந்தப் பகுதி, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்கக் காவலரண் அமைந்த பகுதி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!