கொரோனாவை விட கொடிய நோய் ஒன்று எதிர்காலத்தில் உருவாக வாய்ப்புள்ளது – எச்சரிக்கும் வெளவால் பெண்மணி!

சீனாவில் வெளவால்கள் தொடர்பில் நெடிய பல ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ஆய்வாளர் பெண்மணி உலக நாடுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையை முதன் முறையாக கோரியுள்ளார். சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய துவக்க காலகட்டத்தில், அதன் மரபணுவை கண்டறிந்து, முதன் முறையாக எச்சரிக்கையும் விடுத்தவர் வெளவால் பெண்மணி என அறியப்படும் Shi Zhengli. இவர் தற்போது வெளியிட்டுள்ள தகவல்கள், எதிர் காலத்திலும் உலக நாடுகள் ஏதும் பாதுகாப்பாக இல்லை என்பதை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.

தற்போது உலக நாடுகளை கடுமையாக முடக்கியுள்ள கொரோனா வைரஸ் என்பது வெறும் ஒரு சிறு பகுதி எனவும், சீனா வுஹான் ஆய்வகத்தில் சக்தி வாய்ந்த பல வைரஸ்கள் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதுபோன்ற அச்சுறுத்தல்களில் இருந்து எதிர்காலத்தில் தப்பித்துக் கொள்ள உலக நாடுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுப்பது அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அறிவியல் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தப்படுவது உண்மையில் மிகவும் வருந்தத்தக்கது என குறிப்பிட்டுள்ள அவர், வைரஸ்களில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளுக்கு அரசாங்கங்களும் விஞ்ஞானிகளும் தங்கள் கண்டுபிடிப்புகளுடன் வெளிப்படையாக இருக்க வேண்டும், மேலும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போது கொரோனா வைரஸ் பரவல் போன்று அடுத்த தொற்று நோய் பரவலால் மனித இனம் பாதிக்கப்படுவதைத் தடுக்க நாம் விரும்பினால், இயற்கையில் காட்டு விலங்குகளால் பரப்பப்படும் இந்த அறியப்படாத வைரஸ்களைப் பற்றி அறிந்து முன்கூட்டியே எச்சரிக்கைகளை வழங்க வேண்டும் என்றார். இதுபோன்ற விலங்குகள் தொடர்பில் நாம் ஆய்வு செய்ய தவறினால், கொரோனா வைரஸ் பரவலை விடவும் கொடிய ஒன்று எதிர்காலத்தில் உருவாக வாய்ப்புள்ளது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!