எதிர்வரும் 25 ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்கு மூலம் கொடுக்கவும், அறிவித்தல் விடுக்கப்படும் போது நீதிவான் நீதிமன்றில் ஆஜராகவும் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் சட்டமா அதிபருக்கும் இடையே இணக்கம் காணப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் ஜயரத்ன நேற்று மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவித்தார்.
அதன்படி மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகத்தை அமைக்கும் போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் கோத்தபாய ராஜபக்ஷ எதிர்வரும் 25 ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகவுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் தன்னை கைது செய்வதை தடுக்கக் கோரி கோத்தபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்த போதே பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் ஜயரத்ன இதனை மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவித்தார். மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேன, அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போதே மேற்படி அறிவிக்கப்பட்டது.
இதன்போது பொது சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவை கைது செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மனுதாரர் மற்றும் சட்டமா அதிபர் ஆகிய இரு தரப்புக்கும் இடையில் எட்டப்பட்ட உடன்பாடுகள் எழுத்து மூலம் நீதிமன்றத்தின் முன்னிலையில் முன்வைக்கப்பட்டது. இந் நிலையில் மனுதாரரான கோத்தபாய ராஜபக்ஷவை எதிர்வரும் 25ஆம் திகதி பொலிஸ் நிதி மோசடி பிரிவில் ஆஜராகி வாக்கு மூலம் வழங்குமாறு உத்தரவிட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த வழக்கை ஜூலை மாதம் 25 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!