இராணுவத் தளபதியின் பதில் என்ன?

இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘அண்மையில் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கருத்துக் கூறும் போது அவர்கள் அனைவரும் புலிகளால் கொல்லப்பட்டு விட்டனர் என்று உண்மைக்கு புறம்பான விடையத்தை முன்வைத்தார்.

உண்மையில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது சவேந்திர சில்வா தலைமையிலான 58வது காலால் படைப்பிரிவுதான் களத்தில் நின்றது. அந்தவகையில் 2009 மே-16ம் திகதி 2 மணியில் இருந்து 18ம் திகதி வரை வட்டுவாகல், செல்வபுரம் பகுதியில் சரணடைந்த இலட்சக்கணக்கான மக்களில் பலர் ஆயிரக்கணக்கில் காணாமல் ஆக்கப்பட்டனர். இன்று உறவுகளால் அவர்கள் தேடப்படுகின்றனர்.

இவ்வாறு தேடப்படுபவர்கள் யுத்த களத்தில் இருந்து முழுமையான இராணுவ கட்டுப்பாட்டில் இராணுவத்தினரிடம் பெற்றோர்களால், மனைவிமார்களினால், உறவினர்களால் கையளிக்கப்பட்டவர்கள்.

ஆகவே வட்டுவாகல், செல்வபுரம் பகுதியிலும், ஓமந்தை சோதனைச் சாவடியிலும் பல ஆயிரக்கணக்கில் சரணடைந்தும், கையளிக்கப்பட்டும் அழைத்துச் செல்லப்பட்டு இன்றுவரை அவர்கள் எங்கே உள்ளனர் என தேடி அலையும் உறவினர்களுக்கு இராணுவத் தளபதியின் பதில் என்ன?’ – என்றுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!