3-முறை உலகை சுற்றிவரும் தூரம் பயணித்த சிறிசேன – பணமே செலுத்தவில்லையாம்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஐந்து வருட ஆட்சிக் காலத்தில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிஹொப்டர்களை பயன்படுத்தி ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 277 கிலோ மீட்டர் தூரம் பயணித்தமை அம்பலமாகியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கொழும்பில் இருந்து வெளிவரும் தமிழ் மிரர் பத்திரிகை இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இருந்து பெற்றுக்கொண்ட தகவல்களுக்கு அமையவே இந்த விடயம் அம்பலமாகியுள்ளது.

சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோது அவருக்கு அதிமுக்கிய பிரமுகருக்கான ஹெலிஹொப்டர்களே இலங்கை விமானப்படையால் வழங்கப்பட்டன. அதன்படி அவர் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான எம்ஐ-17 ஹெலிஹொப்டர்களை 535 தடவைகளும், பி-412 ஹெலிஹொப்டர்களை 22 தடவைகளும் பயன்படுத்தியுள்ளார்.

இதன்படி சராசரியாக வருடம் ஒன்றுக்கு 111 தடவைகள் ஹெலிஹொப்டர்களை பயன்படுத்தியுள்ள சிறிசேன 70 ஆயிரத்து 884 கடல் மைல் தூரம் (அதாவது ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 277.17 கிலோ மீட்டர்) பயணம் செய்துள்ளார்.

அத்துடன் அவர் மேற்கொண்ட 557 பயணங்களுக்கும் எந்தவிதமான கட்டணங்களையும் செலுத்தவில்லை. இந்த பயணங்களுக்கான காரணங்களை விமானப்படை தலைமையகம் வழங்க மறுத்திருக்கின்றது.

இந்த பயணங்களின் அடிப்படையில் பார்க்கும் போது புவியின் சராசரி சுற்றளவு 40,030.17 கிலோமீட்டராக இருப்பதால், சிறிசேனவால் மூன்று தடவைகள் பூமியில் மத்தியரேகை வழியாக உலகை சுற்றி வந்திருக்கவும் முடியும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!