கோவிட்-19: இந்தியாவில் ஒரே நாளில் 40 ஆயிரம் பேர் பாதிப்பு!

இந்தியாவில் முதன் முதலில் கடந்த ஜனவரி மாதம் 30-ந் தேதி சீனாவில் இருந்து கேரளாவுக்கு வந்த மருத்துவ மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. சில நாட்களிலேயே அந்த மாணவி நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், தொடர்ந்து இந்தியாவில் மெல்ல மெல்ல கொரோனா பரவ தொடங்கியது. அதன்படி அடுத்த 110 நாட்களில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை எட்டியது. ஆனால் அதன்பின்னர் கொரோனா பரவும் வேகம் அதிகரிக்க தொடங்கியது. முதல் ஒரு லட்சம் பேரை பாதிப்புக்கு உள்ளாக்க 110 நாட்கள் எடுத்துக் கொண்ட கொரோனா, இப்போது 3 நாட்களில் 1 லட்சம் பேரை பாதிக்கச் செய்து வருகிறது.

ஏற்கனவே 9 லட்சமாக இருந்த கொரோனா பாதிப்பு அடுத்த 3 நாட்களில் 10 லட்சமாக உயர்ந்த நிலையில், இப்போது அதற்கடுத்த 3 நாட்களில் 11 லட்சமாக அதிகரித்து இருக்கிறது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 40 ஆயிரத்து 425 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் மராட்டிய மாநிலத்தில் மட்டும் புதிதாக 9,518 பேர் இந்த வைரசின் பிடியில் சிக்கியுள்ளனர்.

இதேபோல ஆந்திராவில் 5,041, தமிழகத்தில் 4,979, கர்நாடகாவில் 4,120, மேற்குவங்காளத்தில் 2,278, உத்தரபிரதேசத்தில் 2,211, பீகாரில் 1,433, தெலுங்கானாவில் 1,296, டெல்லியில் 1,211, அசாமில் 1,081, குஜராத்தில் 965, ராஜஸ்தானில் 934, மத்தியபிரதேசத்தில் 837, கேரளாவில் 821, ஒடிசாவில் 736, ஜம்மு காஷ்மீரில் 701, அரியானாவில் 617, பஞ்சாபில் 308, உத்தரகாண்டில் 239, திரிபுராவில் 224, ஜார்கண்டில் 193, சத்தீஸ்காரில் 174, கோவாவில் 173, புதுச்சேரியில் 105, அருணாசலபிரதேசத்தில் 90, மேகாலயாவில் 32, இமாசலபிரதேசத்தில் 26, மணிப்பூரில் 20, லடாக்கில் 19, சண்டிகாரில் 17, நாகாலாந்தில் 10, சிக்கிமில் 8, அந்தமான் நிகோபார் தீவில் 5, தாதர்நகர் ஹவேலியில் 3 பேருக்கும் ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்து 18 ஆயிரத்து 43 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் புதிதாக 681 பேரின் உயிரையும் கொரோனா பறித்துள்ளது. இதனால் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 27 ஆயிரத்து 497 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு ஒருபுறம் வேகமாக உயர்ந்து கொண்டிருக்கும் வேளையில், அந்த நோயில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பாதிப்பு 11 லட்சத்தை கடந்திருக்கும் நிலையில், அதில் 7 லட்சம் பேர் சிகிச்சையின் மூலம் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இன்னும் 3 லட்சத்து 90 ஆயிரத்து 459 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 5 மாநிலங்களாக மராட்டியம், தமிழகம், டெல்லி, கார்நாடகா, ஆந்திரா உள்ளது. இதில் மராட்டியத்தில் பாதிப்பு 3 லட்சத்தை கடந்துவிட்டது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1¾ லட்சத்தை தாண்டியுள்ளது. 3-வது இடத்தில் உள்ள டெல்லியில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 793 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. கர்நாடகாவில் பாதிப்பு 64 ஆயிரத்தையும், ஆந்திராவில் 50 ஆயிரத்தையும் நெருங்கி இருக்கிறது.

பாதிப்பை போலவே பலி எண்ணிக்கையில் மராட்டியமே முதல் இடத்தில் இருக்கிறது. அங்கு 11 ஆயிரத்து 854 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது. 2-வது இடத்தில் உள்ள டெல்லியில் 3,628 பேரையும், 3-வது இடத்தில் இருக்கும் தமிழகத்தில் 2,551 பேரையும், 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 2,142 பேரையும், 5-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் 1,331 பேரையும் கொரோனா உயிரிழக்கச் செய்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!