சுவிட்சர்லாந்தில் பற்றி எரிந்த குடியிருப்பு: கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலத்தால் எழுந்த சந்தேகம்!

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் குடியிருப்பு ஒன்று தீ விபத்தில் சிக்கியதில் பெண்மணி ஒருவர் மரணமடைந்துள்ளார். பெர்ன் மண்டலத்தின் Gyrischachen மாவட்டத்தில் திங்களன்று இரவு குடியிருப்பு ஒன்று திடீரென்று கொழுந்துவிட்டு எரிந்துள்ளது. இதை கவனித்த ஒரு குடியிருப்பாளர் உடனடியாக பொலிசார் மற்றும் மீட்புக்குழுவினருக்கு தகவல் அளித்துள்ளார்.

உடனடியாக சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த மீட்பு மற்றும் தீயணைப்புக்குழுவினர் துரிதமாக செயல்பட்டு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அருகாமையில் உள்ள குடியிருப்புகளுக்கு எவ்வித பாதிப்பு அல்லது அபாயங்கள் ஏற்படவில்லை. ஆனால், விபத்து ஏற்பட்ட குடியிருப்பில் இருந்து மீட்புக்குழுவினர் பெண் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் குறித்த பெண்மணி உளவியல் பாதிப்புக்கு உள்ளானவர் என கூறப்படுகிறது.

அவர் குடியிருப்புக்கு நெருப்பு மூட்டிவிட்டு தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது தீ விபத்தில் சிக்கி மரணமடைந்தாரா என்பது தொடர்பில் விரிவான விசாரணைக்கு பிறகே தெரியவரும் என மண்டல பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும், உளவியல் பாதிப்பு இருந்தாலும், அவர் அப்பகுதி குடியிருப்பாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியதில்லை என கூறப்படுகிறது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!