ஜனநாயகத்தை பாதுகாக்கவே நாடாளுமன்றத்தில் மிளகாய்த் தூள் வீசினாராம்!

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவே நாடாளுமன்றத்தில் மிளகாய்த் தூள் வீசி தாக்கியதாக பொதுஜன பெரமுனவின் வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.

நேற்று நடத்திய ஊடகச் சந்திப்பு ஒன்றில், 2018ஆம் ஆண்டு ஆட்சிக் குழப்பத்தின் போது, நாடாளுமன்றத்தில் மிளகாய்த் தூள் வீசித் தாக்கியது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.

ஜேவிபி நாடாளுமன்றத்தில் குண்டு ஒன்றை வீச முடியும் என்றால், ரஞ்சன் ராமநாயக்க கத்திகளுடன் சபைக்கு வர முடியும் என்றால், மிளகாய்த் தூளை வீசியதில் என்ன தவறு உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் சார்பில் கம்பகா மாவட்டத்தில் போட்டியிடும், வியத்மக அமைப்பின் உறுப்பினர்களால் தமக்கு எந்தச் சவாலும் இல்லை என்றும், பிரசன்ன ரணவீர மேலும் தெரிவித்துள்ளார்.