திருட்டுத்தனமாக உருவாக்கப்பட்ட கட்சியே கூட்டமைப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பு திருட்டுத்தனமாக உருவாக்கப்பட்ட கட்சி என்று சாடியுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, கூட்டமைப்பு உடனடியாக கலைக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருட்டுத்தனமான வழியிலேயே உருவாக்கப்பட்டது. அந்தக் கட்சிக்கு தேர்தல் ஆணைக்குழுவில் பதிவு கூட இல்லை. தற்போதைய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலைக்கப்பட வேண்டும்.

ஏனெனில் தந்தை செல்வா இறந்து பல வருடங்களின் பின்னரே மாவை சேனாதிராசா அந்தக் கட்சியை பொறுப்பேற்றவர். அதற்கு யாரும் அனுமதி கூட வழங்கவில்லை. மாறாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வன் அனுமதி வழங்கியே மாவை கட்சியின் பொறுப்பை ஏற்றுகொண்டார்.

இவ்வாறு அனைத்தும் திருட்டுத்தனமாகவே நடைபெற்றது. அதனால்தான் கூட்டமைப்பை உடனடியாக கலைக்க வேண்டும் என கோருகின்றேன். மாவை,சம்பந்தன்,சுமந்திரன் தவிர்ந்த அனைத்து தரப்புக்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைய முன்வரவேண்டும்.

பலமான ஓர் கூட்டினை உருவாக்க வேண்டும். அதற்காகவே வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனை கட்சியின் பொறுப்பை ஏற்குமாறு அழைப்பு விடுத்திருந்தேன். எனினும் அவர் இன்றுவரை முன்வரவில்லை என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!