இனி நாங்கள் தூங்க முடியாது!

மக்கள் எமக்கு நல்லபாடத்தை தந்திருக்கிறார்கள் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளஉ செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியா – கற்குழிபகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இந்த தேர்தலில் எமது இருப்பை கேள்விக்குறியாக்கியவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை பெற்றிருக்கின்றார்கள். தமிழர்கள் பூர்வீகமானவர்கள் இல்லை என்று சொல்லும் அவர்கள். அந்த சிந்தனையை எப்படியும் நிலைநாட்டுவார்கள்.

எமது மக்களின் வாக்களிப்பை பார்க்கும்போது தேசியத்தை விட அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுத்திருப்பதை பார்க்க முடிகின்றது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அதனை எதிர்பார்ப்பது தவறில்லை. ஒரு குடும்பம் எனக்கு அனைத்து வசதியும் கிடைத்திருப்பதாக கருதுகின்றபோது தான் அந்த இயலாமையை ஏனையவர்கள் பயன்படுத்த முடியாதநிலை ஏற்படும். எனவே இந்த சூழலை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்படி கையாளப்போகின்றோம் என்பது மிகவும் சவாலான விடயம்.

ஏனெனில் பெரும்பான்மை பெற்றுள்ள அரசாங்கம் அபிவிருத்தியையும் முன்னெடுத்து அதனுடன் இணைந்து தேசியத்தின் தன்மையை உடைக்கின்ற செயற்பாட்டையும் மேற்கொள்ளும். இவை எமக்கு சவாலாக இருக்கப் போகின்றது. எனவே நாங்கள் தூங்க முடியாது. எமது மண்ணை காக்கின்ற பொறுப்பு எம் தலைமேலே சுமத்தப்பட்டிருக்கின்றது.

தேர்தலின்போது கூட்டமைப்பிற்குள்ளேயும் பல பிரச்சினைகள் இருந்தது. வெளியில் இருந்தும் பலர் விமர்சித்தார்கள். எங்களுக்குள்ளேயே நாம் சண்டையிட்டோம். இதனை வாய்ப்பாக பயன்படுத்தி சிங்கள கட்சிகள் தமது காரியத்தை செயற்படுத்தியுள்ளார்கள்.” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!