அமெரிக்காவில் 3 வயது பச்சிளம் குழந்தையை சுட்டுக்கொன்ற அரக்கர்கள்!

அமெரிக்காவில் கடந்த சில வருடங்களாக துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. எனவே துப்பாக்கி வினியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு இந்த விவகாரத்தில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது. இதனால் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.

இந்தநிலையில் லூசியானா மாகாணம் பேடன் ரூஜ் நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது மற்றொரு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் அந்த காரில் இருந்த இப்ரி காம்ஸ் என்கிற 3 வயது பச்சிளம் குழந்தையின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. இதில் அந்த குழந்தை ரத்த வெள்ளத்தில் காருக்குள்ளேயே பரிதாபமாக இறந்தது. மேலும் கார் டிரைவர் பலத்த காயம் அடைந்தார். அவர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய மர்ம நபர்கள் யார்? அதற்கான பின்னணி என்ன? என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை. தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதனிடையே இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பேடன் ரூஜ் மேயர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் ‘‘இன்று இரவு நடந்தது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த சம்பவத்தால் என் இதயம் கனமானது. இந்தக் குழந்தையின் வாழ்க்கையை சமூகம் மதிக்க வேண்டும் இதை யார் செய்தார்கள் என்பது உங்களுக்கு தெரிந்தால் உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!