85 நோயாளிகளை திட்டமிட்டு கொலை செய்த ஜேர்மன் ஆண் செவிலியர்: ஏன் தெரியுமா?..

ஜேர்மனியில் 85 நோயாளிகளை கொன்ற ஆண் செவிலியரின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஜேர்மனியின் ஓல்டன்பர்க் மற்றும் டெல்மென்ஹோர்ஸ்ட் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் 1999 முதல் 2005 வரை நீல்ஸ் ஹோகெல் என்ற ஆண் செவிலியர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பணியாற்றியபோது ஆறு நோயாளிகள் மர்மமான முறையில் உயிரிழந்தனர். அதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நோயாளிகளை நீல்ஸ் கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் மேலும் பலரை கொன்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 85 நோயாளிகளை நீல்ஸ் கொன்றது சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டது. இதில் 43 பேரை தான் கொன்றதாக கடந்த 2018-ல் நீல்ஸ் ஒப்புக்கொண்டார். அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்காத மருந்துகளை அதிகமாக வழங்கி அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட நீல்ஸ் வழிவகுத்துள்ளார்.

அதன் பின் அவர்களை காப்பாற்றவும் முயற்சித்துள்ளார். அப்படி செய்தால் தனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என எண்ணி நீல்ஸ் இந்த செயலில் ஈடுபட்டதை அவரே ஒப்புக்கொண்டார். இதையடுத்து குற்றவாளி நீல்ஸ் ஹோகெலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நீல்ஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நேற்று நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!