மிலிந்த மொரகொட அமெரிக்க உளவாளி! – போர்க்கொடி உயர்த்தும் சிங்கள அமைப்புகள்.

மிலிந்த மொரகொட அமெரிக்காவின் அரசின் ஒற்றராக செயற்பட்டுள்ளார் என்பது விக்கிலீக்ஸ் மூலம் வெளியான அவரது பெயர் குறிப்பிடப்பட்ட கேபிள் செய்திகள் மூலம் உறுதியாகி இருப்பதால், அவரை வெளிநாட்டுத் தூதுவராக நியமிக்கக் கூடாது என சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியம் உயர் பதவிகள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது.

சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் சார்பில் அதன் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் மருத்துவர் வசந்த பண்டார, அந்த முறைப்பாட்டில் கையெழுத்திட்டுள்ளார்.

மிலிந்த மொரகொட அமெரிக்க அரசின் ஒற்றராக செயற்பட்டுள்ளது, 2002 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்களாக இருந்த 4 பேர் அனுப்பியுள்ள 150க்கும் மேற்பட்ட கேபிள் செய்திகளை ஆராயும் போது அறிய முடிவதாக பல தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

விக்கிலீக்ஸ் மூலம் வெளியிடப்பட்ட தகவல்கள் மூலம் அவர் அமெரிக்காவின் ஒற்றராக குறிப்பிடப்படவில்லை. எனினும் அந்த கேபிள் செய்திகளை வாசிக்கும் போது இது மிகத் தெளிவாக புலப்படுகிறது.

இதனை தவிர அரச வளங்களை குறைவாக மதிப்பிட்டு தனக்கு நெருக்கமான தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்தற்காக தனது அமைச்சு அதிகாரத்தை பயன்படுத்தியதாக இரண்டு வழக்கு தீர்ப்புகளில் கூறப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், அவரை குற்றவாளியாக அறிவித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியும்.

இப்படியான நபரை இலங்கையின் தேசிய பாதுகாப்பு சம்பந்தமாக பெரிய அழுத்தங்களை கொடுக்கக் கூடிய (இந்தியா) நாடொன்றின் உயர்ஸ்தானிகராக நியமிப்பதன் மூலம் முழு தூதரக சேவை தொடர்பாக மக்களின் நம்பிக்கை சீர்குலையும் என்பதால், மிலிந்த மொரகொடவை அந்த பதவிக்கு நியமிக்க பரிந்துரைக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கின்றோம் எனவும் வசந்த பண்டார தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!