யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடம் இணையவழியில் மோசமான பகிடிவதை!

யாழ்ப்பாண பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மீது இணையவழியில் மிக மோசமான பகிடிவதை நடைபெறுவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

“இரண்டு சிரேஷ்ட மாணவர்களும், இரண்டு சிரேஷ்ட மாணவிகளும் இந்த மோசமான பகிடிதையில் ஈடுபட்டுள்ளனர். வட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடகங்களில் வழியாக நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் சுயஇன்பம் செய்யும் காட்சிகளை அனுப்புமாறு கட்டாயப்படுத்தி வருகின்றனர்.

அவர்களின் கட்டளைக்கு செவிசாய்க்க மறுத்தவர்கள் பல்கலைக்கழகத்திற்கு வரும்போது கடுமையான விளைவை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

3ஆம்,4ஆம் ஆண்டு மாணவர்களான இந்த பகிடிவதை குழு, கிட்டத்தட்ட 120 புதுமுக மாணவர்களை பகிடிவதைக்கு உள்ளாக்கியுள்ளனர். அவர்களின் மிரட்டலிற்கு அஞ்சிய புதுமுக மாணவர்களில் பெரும்பாலானவர்கள் இதுபோன்ற படங்களை அவர்களிற்கு அனுப்பியுள்ளனர்.

கொரோனா தொற்றையடுத்து முடக்கம் அறிவிக்கப்பட்ட பின்னர் பெரும்பாலான விரிவுரைகள் இணையவழியாக நடத்தப்பட்டன. இந்த காலகட்டத்தில் இந்தவகையான இணையவழி பகிடிவதை தொடங்கியது.

இந்த மோசமான பகிடிவதை காரணமாக, பல புதுமுக மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு செல்ல விரும்பில்லை. இது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டிருந்தாலும், யாழ் பல்கலைகழக நிர்வாகம் இன்றுவரை எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லையென குற்றம்சாட்டப்பட்டுள்ளது.” என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!