கருணாகரன் எம்.பியின் கோரிக்கையால் கொதித்த ஆளும் தரப்பு!

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் களேபரத்தில் ஈடுபட்ட அம்பிட்டியே சுமனரத்தன தேரர் மீது சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான கோவிந்தன் கருணாகரன் நாடாளுமன்றில் கோரிக்கை முன்வைத்தார்.

எனினும் மதத் தலைவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்க வேண்டாம் என்று கருணாகரன் எம்.பி மீது சீறிப்பாய்ந்த பொதுஜன முன்னணியினர் அவரது கூற்றை ஹான்சாட்டிலிருந்து நீக்கும்படியும் வலியுறுத்தினார்கள்.

அம்பிட்டியே சுமனரத்தன தேரர் மீது சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போது கோரிக்கையொன்றை முன்வைத்தார்.

கோவிந்தன் கருணாகரன், மதங்களுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்த பொதுஜன பெரமுன எம்.பி மொஹமட் முஸம்மில், அவரது கருத்தை ஹான்சாட்டிலிருந்து நீக்கும்படி வலியுறுத்தினார்.

கருணாகரன் எம்.பியின் உரையினிடையே குறுக்கீடு செய்த மற்றுமொரு ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, இவரது கருத்தானது நாட்டில் மீண்டுமொரு குழப்பத்தை ஏற்படுத்தலாம் என எச்சரித்தார்.

எனினும் கோவிந்தன் கருணாகரனின் உரைக்குப் பின் சபையில் எழுந்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சக எம்.பியின் கருத்தானது மதத்தலைவர்களைக் கொச்சைப்படுத்துவதாக அமையவில்லை. மாறாக ஒரு பிக்குவின் செயற்பாடு அரசாங்கத்திற்கு அகௌரவப்படுத்தியிருப்பதால் அதுபற்றி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையே வலியுறுத்தினார் என்று சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து ஆளும்தரப்பு எம்.பிக்கள் தமது சீற்றத்தை தணித்துக் கொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!