வடக்கில் பஸ் சேவைகளை மாவட்டங்களுக்குள் மட்டுப்படுத்த முடிவு!

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த தனியார் பேருந்துகள், மாவட்டங்களுக்குள்ளேயே சேவைகளை மட்டுப்படுத்துவதற்கு, மாகாண பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

பொதுப் போக்குவரத்தினால் கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே, இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நா.நகுலராஜா தெரிவித்துள்ளார்.

“யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்தினர் இணைந்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், வெளி மாகாணங்களிலிருந்து பேருந்துகளை நிறுத்துவதற்கு, அந்தந்த மாவட்டங்களின் தனியார் பேருந்து உரிமையாளர்களும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பொதுப் போக்குவரத்தின் ஊடாக கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, அரச பேருந்துகளும் வெளி மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்களை மட்டுப்படுத்தியுள்ள நிலையில், இனிவரும் காலங்களில் மாவட்டங்களுக்கு இடையில் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட சேவையை வழங்குவதற்கான பேச்சுக்களில் ஈடுபட்டு வருவதாகவும், கிளிநொச்சி மாவட்ட பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!