தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டு வரப் பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்ப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு நிபந்தனையும் விதிக்கவில்லை.
2015ஆம் ஆண்டு முன்வைத்த கோரிக்கையை தற்போது மீண்டும் முன்வைத்துள் ளார்கள். அவ்வளவுதான். அந்தக் கோரிக்கைகளில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் விரைவுபடுத்தப்பட வேண்டியது உண்மைதான். இவ்வாறு அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்ப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு தலைமை அமைச்சருடன் ரணிலுடன் எந்தவொரு உடன்பாட்டையும் மேற்கொள்ளவில்லை என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து, கூட்டமைப்புக்குள் ஏற்கனவே குழப்பத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், அமைச்சர் ராஜித இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு, அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித கலந்து கொண்டார்.
‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசுக்கு இணக்கப்பாடு எட்டப்பட்டதா? கூட்டமைப்பு தலைமை அமைச்சருக்கு ஆதரவளிக்க நிபந்தனை விதிக்கப்பட்டதா?’ என்று செய்தியாளரால் கேள்வி எழுப்பப்பட்டது.
‘அவ்வாறு எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. அவர்கள் 2015ஆம் ஆண்டு முன்வைத்த கோரிக்கையை தற்போது மீண்டும் முன்வைத்துள்ளார்கள். அதாவது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். அரசியல் கைதிகள் தொடர்பான வழக்குகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். காணமாற்போனோர் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும் என்பனவே கூட்டமைப்பின் பிரச்சினையாகும். அது நீண்டநாள் பிரச்சினையாகும். அவை உண்மையில் விரைவுபடுத்தப்பட வேண்டும். அதற்காக நிபந்தனை விதிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. அது தொடர்பில் பேசவுமில்லை’ என்று பதிலளித்தார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!